சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான பல்வேறு உதவிகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முத்துஜயன்கட்டு ஜீவநகர் அறநெறிப்பாடசாலையில் கல்வி கற்கின்ற 52 மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கப்பட்டதுடன், குறித்த முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு ரூபா 175,000 பெறுமதியான மலசலகூடம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கிவைத்துள்ளார்.
குடிநீர் கிணறு
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் குடி நீர் இன்றி பல காலமாக சிரமத்திற்குள்ளாகியிருந்த ஒட்டுசுட்டான் பரசங்குளம் மக்களுக்கு ஏற்கனவே கட்டப்பட்ட கிணறு குடிநீரின்றி காணப்பட்ட நிலையில் அதனை ரூபா 340,000 பெறுமதியில் சீர்செய்து மக்களிடம் குடிநீர் பெறுவதற்க்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 16 குடும்பங்கள் பயன் பெற்றவுள்ளனர்.
குறித்த கிணறு நேற்று(28) காலை 11.15 மணியளவில் மக்களின் பாவனைக்காக சுப நேரத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், கிராம மக்கள், மாதர்சங்க நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சமூகசெயற்பாட்டாளர் இ.தயாபரன் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மேலும், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் வாராந்த நிகழ்வில் சுயதொழில் முயற்சிக்காக ஆவரங்கால் மேற்கு , புத்தூரை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கும், மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியை சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு தலா 75000/- வீதம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்மீக செயற்பாடாக காலை 10.50 மணி தொடக்கம் 11.45 மணி வரை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆன்மீக அருளுரையினை சைவப்புலவரும், ஆசிரியருமான தவத்திரு இ. திருமாறக்குருக்கள் அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.
இதில் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |