இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம்..
''இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை. இது தயார் நிலையில் இல்லாததால் நடந்த படுகொலை. மக்களை நீங்கள் படுகொலை செய்திருக்கின்றீர்கள். தயார் நிலையில் இல்லாமல் இருந்தமை மூலம் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றீர்கள்'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(1) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலட்சக்கணக்கான மக்கள்
இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு அனுமதிக்கும்படி எதிர்க்கட்சிகள் அரசு தரப்பைக் கோரினர்.
அதற்கு அரசு தரப்பு இணங்க மறுத்தமையை அடுத்து, எதிர்க்கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பின்னர் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் நாளைமறுதினம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அனைத்துக் கட்சிகளாலும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தமிழரசுக் கட்சியினராகிய நாங்களும் இந்தச் சபை அமர்விலே இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.
இந்தத் தீர்மானத்துக்கான முக்கிய காரணம் வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இந்த இயற்கை அனர்த்தத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் பாதிப்பு
பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் 30.11.2025 மாலை 6 மணிக்குப் பின்னர் அரசாங்கத்தால் அறிக்கைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நாங்கள் அனைவரும் ஓர் அணியாக நின்று இன்றைய நாளில் எம் மக்களது குறைபாடுகள், நிவாரணப் பணிகளை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம், எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும்.

மாவிலாறு அணக்கட்டு உடைந்து திருகோணமலையில் பெரும் பாதிப்பு. மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடளுமன்றத்துக்கு எம் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வந்துள்ளோம்.
எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய கட்சி எமது தமிழரசுக் கட்சி. வடக்கு, கிழக்கிலே உள்ளூராட்சி மன்றங்கள் எமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கின்ற செயற்பாடுகளில் உள்ளூராட்சி மன்றங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
எங்களது உதவியை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகின்றீர்கள்? நாங்கள் பல சர்வதேச தொடர்புகளைக் கொண்ட கட்சி. எமது வடக்கு, கிழக்கிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை வழங்குவது என்பது தொடர்பாகப் பேசுவதற்கு இன்றைய அமர்வை ஒரு சில மணித்தியாலங்கள் ஒதுக்கித் தரும்படியே கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால், அதுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழ்ப் பேசும் உறவுகள்
இரண்டு நாள்களுக்குப் பின்பு வரவு - செலவுத் திட்டத்தை விவாதமே இல்லாமல் அப்படியே அமுலுக்குக் கொண்டுவர ஆதரவு தெரிவிப்போம் என நாங்கள் இணங்கியிருந்தோம். அதைக் கூறியும் நீங்கள் அதற்கு (இன்றைய நாளில் உடனடிப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு) இணங்கவில்லை.
இன்று முழு நாள் விவாதம், ஆகக் குறைந்தது மாலை 6 மணி வரை ஆறு மணி நேரம் தந்திருந்தால் எங்களுடைய மாவட்டங்களில் இருக்கும் உடனடிப் பிரச்சினைகளைச் சொல்லியிருக்கலாம்.

இன்று மத்திய மாகாணத்தில் எங்களுடைய தமிழ்ப் பேசும் உறவுகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சில கிராமங்கள் முழுமையாக இல்லாமல் போயிருக்கின்றன.
இவர்களைப் பற்றி நாங்கள் பேச வேண்டும். இது ஒரு கொலை. இது தயார் நிலையில் இல்லாததால் நடந்த படுகொலை. மக்களை நீங்கள் படுகொலை செய்திருக்கின்றீர்கள். தயார் நிலையில் இல்லாமல் இருந்தமை மூலம் மக்களைப் படுகொலை செய்திருக்கின்றீர்கள்.
மக்களது பிரச்சினையை முன்வைக்க எமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பொருத்தமற்ற இந்தச் செயன்முறையின் காரணமாக மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என அரசாங்கம் பயப்படுகின்றது." என குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri