முல்லைத்தீவில் கலப்பட நெய் விற்பனை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதுக்குடியிருப்பு- உடையார்கட்டு பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான நெய் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவை கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுகள்
மேலும், நெய் போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த லேபலில் இடம்பெற்றிருந்த உரிமையாளர் தொடர்பான தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸினால் இன்றையதினம் (17.07.2026) வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மொத்தமாக 30,000 ரூபாய் அபராதம் விதித்தது.
சிறைத்தண்டனை
மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள குறித்த நெய் போத்தல்கள் அனைத்தையும் 2 வாரங்களுக்குள் மீளப் பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கடுமையான எச்சரிக்கையையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.