தனிநபரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! இலச்சினையில் சேர்க்கப்பட்ட தமிழ் மொழி
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இலச்சினை மீண்டும் மூன்றுமொழிகளும் இடம்பெறும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது என அதன் பிரதிமுகாமையாளர் அஜந்த செனிவரட்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஒன்பது மாதங்களிற்கு முன்னர் இந்த இலச்சினை மாற்றப்பட்டது.
இன ஐக்கியம்
நேற்று நாங்கள் மீண்டும் பழைய இலச்சினைக்கு திரும்பியுள்ளோம். எங்களுடன் தொடர்புபட்டுள்ள பலர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே இந்த மாற்றம் இடம்பெற்றது.
இது தொடர்பில் பொதுவான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன ஐக்கியத்தையும் மீண்டும் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
அத்துடன், சிங்கள மொழி மாத்திரம் காணப்படும் விதத்தில் மாற்றப்பட்ட இலச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய இலச்சினையை மீண்டும் கொண்டுவரக் கோரியும் தனி நபராக போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
தனுஹ ரனன்ஜக என்பவரே இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னால் தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இலச்சினை மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர் ஒரு வார்த்தையை உரக்க பேசாமால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நான் வெற்றிபெற்றுள்ளேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வெளியே பதாகையொன்று பலமணிநேரமாக காணப்பட்ட இவர் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இலச்சினையில் தமிழும் இடம்பெறவேண்டும் என தனிநபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை நான் அறிவேன் என பிரதிமுகாமையாளர் அஜந்த செனிவரட்ண தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.