திருகோணமலையில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் வீதிப்புனரமைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட தாயிப் நகர் முதல் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதியின் புனரமைப்பிற்கு 70 மில்லியன் நிதி செலவிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழே சுமார் 3 கிலோ மீற்றர் நீளமான தாயிப் நகர் முதல் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதி புனரமைக்கப்பட்டது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதான பொறியியலாளர் குறிப்பிட்டார்.
தகவலறியும் கோரிக்கை
இந்த திட்டத்தில் பாலங்களை புனரமைப்பதற்கான நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படாமையினால் குறித்த வீதியிலுள்ள கல்வெட்டு புனரமைப்பு செய்யப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
குறித்த வீதி தம்பலகாமம் பிரதேச சபைக்கு உரித்தானது என்பதனால் குறிப்பிட்ட கல்வெட்டினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தம்பலகாம் பிரதேச சபையியிடம் தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு பிரதான பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட பிரதான பொறியிலாளர் அலுவத்திற்கு குறித்த வீதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.