நாள் ஒன்றுக்கு பல மணி நேர மின்வெட்டு அபாயம்? - வெளியான தகவல்(Exclusive)
எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் நாள் ஒன்றுக்கு பல மணி நேரம் மின்சார விநியோகம் தடைப்படும் என்ற தகவலை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் நாள் ஒன்றுக்கு பல மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
“மின்சார விநியோகத்தை பொறுத்த மட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நீரேந்தும் பகுதிகளில் மழைவீழ்ச்சி இல்லாது போனால் நீர் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
அனல் மின் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் அங்கும் உற்பத்தி மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. களனி திஸ்ஸ மின்சார நிலையத்தில் உற்பத்தியை மேற்கொள்வதற்கு உலை எண்ணெய் அவசியமாகும்.
அங்குள்ள இயந்திரங்கள் உலை எண்ணெயால் ஆரம்பிக்கப்பட்டு டீசலால் செயற்படுகின்றன.
எனினும், தற்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து உலை எண்ணெய் கிடைக்காமையினால் இயந்திரங்கள் டீசல் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே அந்த இயந்திரங்களில் பொறியியல் பிரச்சினை ஏற்பட்டு நாட்டின் பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டது .
எனவே மின்சார உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் மூல வளங்கள் டொலர் பற்றாக்குறைக்கு மத்தியில் உரிய நேரத்தில் கிடைக்காது போகுமிடத்து மின் விநியேகத்தில் தடை ஏற்படலாம்” என்றார்.