யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்று (6) முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை ஒரு வார காலப்பகுதியை யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச மட்ட கிராமிய மட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை நடத்தப்பட்டு ,டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் பாடசாலைகள், பொதுஇடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் அரச தனியார் நிறுவனங்கள்,வர்த்தக நிலையங்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள், பொதுஇடங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிக்க வேண்டும்.
மாகாணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களிலிருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் பரவும் வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
வடமாகாணத்தில் 238 பேர் இந்த வருடத்தில் டெங்குகாய்ச்சலுக்கு
உள்ளாகியுள்ளனர். அவற்றில் யாழ்ப்பாணத்தில்147 பேரும், மன்னாரில்
25 பேரும், கிளிநொச்சியில் 25 பேரும், முல்லைத்தீவில் 36 பேரும், வவுனியாவில் 5
பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு சம்பந்தமாக இறப்புக்கள் எதுவும்
பதிவாகவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.