சஜித்திற்கு விதிக்கப்பட்ட தடை, பரிசோதனையில் வெளியான தகவல்
தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதன் காரணமாகக் கொழும்பு துறைமுக காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
கடந்த 24 வருடங்களாக இருந்து வருகின்ற சம்பள அதிகரிப்பு பிரச்சினைக்குத் தீர்வைக் கோரி இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும், பேரணியையும் நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தின் இறுதியில் காலி முகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் முற்றுகைப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட இலங்கை காவல்துறையினர் 44 பேரைக் கைது செய்ததோடு, 10ற்கும் மேற்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு நடத்திய கோவிட் பரிசோதனையில் அவர்களுக்குத் தொற்று இருக்கவில்லை.
இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக காவல் நிலையத்திற்கு ஆசிரியர்களைச் சந்திப்பதற்காக ஸ்ரீலங்கா எதிர் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவர் தலைமையிலான அணியினர் இன்றைய தினம் முற்பகலில் சென்றனர்.
எனினும் தடுப்பிலுள்ள ஆசிரியர்களைச் சந்திக்க காவல்துறையினர் சஜித் அணியினருக்கு இடமளிக்காததினால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் காவல்துறைமா அதிபருக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் சஜித் அணியலுள்ளவருமான நளின் பண்டார தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் இறுதிவரை தொடர்புகொள்ள முடியாமற் போயுள்ளது.
காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் சஜித் அணியினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் 44 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.