நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்கள் அங்கீகரிக்காத ஜனாதிபதி - த.இன்பராசா
இந்த நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்கள் அங்கீகரிக்காத ஜனாதிபதி, பெரும்பான்மை சிங்கள மக்களினால் கொண்டுவரப்பட்ட ஒரு ஜனாதிபதி என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா (T.Inbarasa) தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது இவ்வாறான பிரச்சினைகள் இந்த நாட்டு மக்களுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களாகிய நாம் காலாகாலமாக ஏமாற்றப்பட்டே வந்தருக்கின்றோம்.எமது நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் பற்றிச் சிந்திப்பதாகவும் இல்லை, எமக்கான தீர்வினைத் தருவாதாகவும் இல்லை.
எமது தமிழ் அரசியல்வாதிகளும் ஆட்சிகள் மாற மாற அந்த ஆட்சியாளார்களின் பின்னே துணைபோய்க் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டின் ஜனாதிபதி செயற்படுகின்ற விதத்தைப் பார்த்தால் இந்த நாட்டில் அனைத்து மக்களும் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.இந்த அரசாங்கத்தினால் விவசாயம் முடக்கப்பட்டு விட்டது.
இனிவரும் காலத்தில் 40 வீதமான பெறுபேறுகளையும் விவசாயத்தில் பெற முடியாது.பொருளாதாரத்தில் முதுகெலும்பாகவுள்ள விவசாயத்தைக் கூட தற்போதை ஆட்சியாளர்கள் முடக்கிவிட்டார்கள்.
ஒரு நாட்டில் வறுமை, கொலைகள், கொள்ளைகள் என்பன இடம்பெறுவதற்குக் காரணம் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் விடுகின்ற பிழைகளே.நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது இவ்வாறான பிரச்சனைகள் இந்த நாட்டு மக்களுக்கு வரவில்லை.பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல், விவசாயத்திலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இந்த அரசாங்கம் வந்ததன் பின்னர் அனைத்தையும் முடக்கி அனைத்து மக்களையும் வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளது.ஒரு நாட்டின் வறுமையும், பொருளாதார வீழ்ச்சியுமே போருக்கு வழிவகுக்கின்றது.
அதேபோன்று இந்த நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்குத் தள்ளும் செயற்பாட்டிலேயே இந்த அரசாங்கம் ஈடுபடுகின்றது.
இந்த நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்கள் அங்கீகரிக்காத ஜனாதிபதி பெரும்பான்மை சிங்கள மக்களினால் கொண்டுவரப்பட்ட ஒரு ஜனாதிபதி.
இலங்கையில் இரண்டு நாடு இருக்கின்றது என்பதைத் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலின் போதே காட்டியிருக்கின்றார்கள்.இதனை நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும், சர்வதேச ரீதியிலும் இருப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான நிலைகளில் எமது தமிழ் அரசியல்வாதிகள் மிகத் தந்திரோபாயமான முறையில் இதயசுத்தியுடன் செயற்பட்டு எமது தமிழ் மக்களுக்கான தீர்வு, பொருளாதாரம் என்பன தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் விட்ட பிழைகளை விடாமல் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இல்லாவிடில் கனடாவிலே சுமந்திரன், சாணக்கியன் ஆகியோருக்கு நடந்தது போன்றே வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் நடக்கும். என தெரிவித்துள்ளார்.