செம்மலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - செம்மலைப் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளத்தில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சுழியில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செம்மலைப் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி தொழிலுக்காக நேற்று மாலை சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவபாதம் ஸ்ரீசங்கர் (34 வயது) என்ற குடும்பஸ்தர் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுழியில் அகப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மீன்பிடித்தவரை காணவில்லை என உறவினர்கள் தேடி சென்றபோது நீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நபரிடன் சடலம் மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.