உருக்குலைந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் மீட்பு (Photos)
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மையலம்பாவெளி வாவியிலிருந்து கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (16.04.2023) கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் பரிசோதகர், வை.விஜயராஜா மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய நிருவாகப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சறூக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கடற்றொழிலாளர்களின் உதவியோடு வாவியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலம், கை கால்களற்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - ஈச்சந்தீவு நாவற்காட்டைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய அமரசிங்கம் ஜெயச்சந்திரன் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை
இச்சம்பவம் பற்றி பொலிஸாரிடம் விவரம் தெரிவித்த உறவினர்கள், இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் ஈச்சந்தீவு துறையடியில் இருந்து தனது தோணியில் சென்றவர் வீடு திரும்பாததால் தாங்கள் ஈச்சந்தீவை ஒட்டிய வாவியில் தேடுதலை மேற்கொண்டபோதும் கண்டு பிடிக்கமுடியவில்லை. இன்றைய தினம் (16.04.2023) சடலம் மைலம்பாவெளி வாவியில் மிதப்பதாக எமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.
மேலும், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுணதீவு மற்றும் , ஏறாவூர் பொலிஸார் இணைந்து விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









