ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் தொல். திருமாவளவன் விடுத்துள்ள கோரிக்கை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைப் பெற்றபோதும் 30 வருடங்களாகியும் இன்னும் விடுவிக்கப்படாத 7 பேர் தொடர்பில் மீண்டும் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ் நாடு அரசாங்கத்தின்,சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது வரவேற்கத்தக்க முடிவாகும்.
எனினும் தமிழக மாநில அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் இந்த விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கு தமிழக அரசாங்கம் முன்வர வேண்டும். அதற்காக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.
ஏற்கனவே இவர்களை விடுதலையைக் கோரி ஜெயலலிதா ஜெயராம் முதலமைச்சராக
இருந்தக்காலத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு
அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.