ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மலிக் சமரவிக்ரம
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்
மலிக் சமரவிக்ரம, ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த அவர் பெரும் பங்களிப்புகளை செய்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்ய மலிக் சமரவிக்ரம கடந்த காலத்தில் முயற்சித்த போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் இணைய மறுத்துள்ளதால், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இணையும் ஐக்கிய மக்கள் சக்தியின் 16 எம்.பிக்கள்
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல சிறிய கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணைய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அரசாங்கத்தில் இணையும் இந்த தரப்பினர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த வார இறுதியில் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய விரும்பும் மற்றும் விரும்பாத கட்சிகளின் தீர்மானங்களை கேட்டறிந்த பின்னர், சர்வக்கட்சி ஆட்சி அமைக்கப்படும் என தொழிலமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.