தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர தயார்! விடுக்கப்பட்டுள்ள சவால்
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம்(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தையிட்டி விகாரை
அவர் மேலும் கூறுகையில்,
தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடையம் குறித்தே மக்கள் போராடுகின்றனர். இதே நேரம் கடந்த அரசுகள் போன்று அநுர அரசும் இனவாதத்தை தொடர்ந்தும் பேசாமல் அதை தடுக்க நாடாளுமன்றில் சட்டம் இயற்றி நடைமுறையாக்க வேண்டும்.

இதே நேரம் நாட்டில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் கிடையாது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது.
அநுர அரசு ஆட்சிக்கு வரும்போது கூறிய விடயங்கள் ஒன்று.இன்று செயற்படுத்துவது இன்னொன்று.
திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தருவோம் என்றார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம்
ஆனால் அவை அனைத்தும் இன்று காணாமல் போய்விட்டது.

இதேவேளை வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் வந்து அச்சமின்றி பாதுகாப்பின்றி நடந்து செல்ல ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் இன்னும் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் இருகின்றது.
எதற்காக அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri