கடந்தகால ஊடகத்துறை மீதான அடக்குமுறை குறித்து கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி
கடந்தகாலங்களில் இந்தநாட்டில் ஊடகத்துறையின்மீது மேற்கொள்ப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (05.02.2025) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த போர்க்காலம்
இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே காலத்திற்குகாலம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை நசுக்கப்படுகின்ற அவல நிலையே தொடர்கின்றது.
அந்தவகையில் கடந்த போர்க்காலப்பகுதியில் பல ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
பல ஊடகவியலாளர்களும் ஊடகப்பணியாளர்களும் இந்த நாட்டில் தமக்கு இருந்த அச்சுறுத்தல் நிலைகளால் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனைவிட ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள்
குறிப்பாக தராகி சிவராம், மயில்வாகனம் நிமலராஜன், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், ஐயாத்துரை நடேசன், லசந்த விக்ரமதுங்கபோன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதை உதாரணமாகச் சொல்லமுடியும்.
இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு இதுதொடர்பில் அவர்களது குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
ஆகவே தயவுசெய்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் வலிகளை உணர்ந்தவர்கள். ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், அவர்களின் சுயாதீனத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |