ரவி கருணாநாயக்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு-பணத்தை பெற்று பதவியை துறக்கும் எம்.பி
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரவி கருணாநாயக்கவுக்காக பதவி விலகும் மொட்டுக்கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ரவி கருணாநாயகக இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பணத்தை வழங்கி பதவி விலக செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது இலங்கை மத்திய வங்கியில் நடந்த பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்ட அவர் உட்பட கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர்.