யாழில் புத்தாக்கம் படைப்போர் மற்றும் தொழில் முனைவோருக்கு அரிய சந்தர்ப்பம்..!
தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் படைப்போருக்கான மாபெரும் கண்காட்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்றையதினம் (28) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில், ”நாங்கள் பல்வேறு வயதுப் பிரிவினர்களிடையே பல்வேறு செயற்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனறால் entrepreneurship club என்ற கழகம் ஒன்றினை உருவாக்கியுள்ளோம்.
புத்தாக்க சிந்தனை
பாடசாலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்களுக்கு 100% புலமை பரிசிலான ஒரு coding school (ஊக்கி) என்றொரு செயற்றிட்டத்தை செய்கின்றோம். புத்தாக்க சிந்தனைகளுடன் இருப்பவர்களுக்கு அதனை ஒரு வணிகமாக எப்படி மாற்றுவது, அந்த வணிகத்தை எப்படி சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வது என்பதற்கான உதவித் திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு செய்கின்ற செயற்திட்டத்தை நாங்கள் ஒழுங்குப்படுத்தி ஒவ்வொரு வருடமும் ஒரு புத்தாக்க திருவிழாவாக செய்து வருகின்றோம். இந்த திருவிழாவானது ஓகஸ்ட் 2,3 மற்றும் 4ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இங்கு சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் புதுமையான விடயங்களை காட்சிப்படுத்த உள்ளோம். உதாரணமாக பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புகள், ஒரு தொழிலை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களது கண்டுபிடிப்புகள், போட்டிகள், பனையோலையில் பொருட்களை எப்படி செய்வது, களிமண்ணில் பொருட்களை எப்படி செய்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த மூன்று நாள் திருவிழா நடைபெற உள்ளது.