சர்ச்சையை ஏற்படுத்திய ரணிலின் லண்டன் பயணம்!
அரசாங்க நிதியில் லண்டனுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அரசாங்க நிதியில் லண்டனுக்கான தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளது. ஆனால் அது முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.
மூன்று விஜயங்கள்...
கடந்த 2023ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க, மூன்று தடவைகள் லண்டனுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தார். முதலாவது விஜயம் - 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 09ம் திகதி இரண்டாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது விஜயம் - பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் சர்வதேச ராஜதந்திரிகளின் மாநாட்டில் (IDU) கலந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவது விஜயம் - ஹவானா நகரில் நடைபெற்ற G 77 மாநாட்டில் கலந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் நிவ்யோர்க் அமர்விலும் கலந்து கொண்ட பின்னர் , பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தின் வுல்வத்ஹம்ப்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட பேராசிரியை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது லண்டனில் வைத்து ஏராளம் சர்வதேச ராஜதந்திரிகளுடன் முக்கிய சந்திப்புகளில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார். முதல் பெண்மணி என்ற வகையில் பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்கவும் இதன்போது பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
லண்டனுக்கான விஜயத்தின் போது அன்றைய தினம் பிற்பகல் இலங்கை திரும்புவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாறான சந்திப்புகள் காரணமாக இலங்கை திரும்பும் பயணம் மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நிகழ்வுகளின் மூலமாக இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிட்டியது.
அவ்வாறான நிலையில் ராஜதந்திர நிகழ்வுகளின் போது செலவிடப்படும் தொகை குறித்த போதிய தெளிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லாத காரணத்தினாலேயே இதுகுறித்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, தனிப்பட்ட விஜயங்களை மேற்கொள்ளவில்லை என்பதை வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.