மொட்டுக்கட்சியினரிடம் சிக்கிக்கொண்ட ரணில்-அனுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது சிரிக்கும் மொட்டுக்கட்சியினர்
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளார். ரணில் எழுந்திருக்கும் போது மொட்டுக்கட்சியினர் எழுந்திருக்கின்றனர்.
அவர் அமரும் போது மொட்டுக்கட்சியினர் அமருக்கின்றனர். ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது மொட்டுக்கட்சியினர் சிரிக்கின்றனர். மேலும் சிலர் ரணில் உரையாற்றும் போது தொலைக்காட்சியில் தெரிவதற்காக அவருக்கு பின்னால் வந்து அமருகின்றனர்.
மக்களை மகிழ்விக்கும் திட்டம் ரணில் அரசாங்கத்திற்கு இல்லை
மொட்டுக்கட்சியின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விப்பதே ரணில் விக்ரமசிங்கவின் ஒரே திட்டமாக இருக்கின்றது. எனினும் இராணுவத்தினர், பொலிஸார், கமத்தொழிலாளர்கள், மீனவர்களை மகிழ்விக்கும் எந்த திட்டங்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இல்லை.
இவர்கள் அனைவரும் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ளனர். நாம் அனைவரும் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.