ரணில் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு.. அமைச்சர் பிமல் விளக்கம்!
ஜுலைக் கலவரம், யாழ். நூலக எரிப்பு போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற காலப் பகுதியிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருக்க வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (24.08.2025) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கையானது ஒரு அரசாங்க பழிவாங்கல் அல்ல.
சட்டம் எல்லோருக்கும் சமம்..
நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைய நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே அது இடம்பெற்றது. இதுவரை காலமும் இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு மாத்திரமே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் எமது ஆட்சியில் யார் எவர் என்ற தராதரம் பாராது, அனைவருக்கும் சமமான வகையில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. தற்போது இதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் அவர்களால் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.
தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாதவர்கள், மக்களால் தோற்க்கடிக்கப்பட்டவர்களே ஒன்று சேர்ந்துள்ளனர். மைத்திரி, நிமால் சிறிபாலடி சில்வா, மனோகணேசன் இவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் ஒன்று சேர்ந்து குத்துவதால் எதுவும் நடந்து விடாது. ரணிலின் காலத்திலேயே யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது, கறுப்பு யூலை கலவரம் இடம்பெற்றது.
பல குற்றச்சாட்டுக்கள்
அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வவுனியா, செட்டிகுளம், வாரிக்குட்டியூர், பகுதிகளிற்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். அத்துடன் பட்டலந்தை அறிக்கை தொடர்பாக அனைவருக்கும் தெரியும். அதற்கும் ரணில் விக்ரமசிங்க பதில் சொல்ல வேண்டும். எனவே அந்த காலப்பகுதியில் தான் இவரை கைது செய்திருக்க வேண்டும்.
இது சின்ன விடயம் தான். ஆனால் எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி ஊழல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் ஊழல்வாதிகள், அரச பணத்தை மோசடி செய்தவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டம் பாயும். பொலிசார் சுதந்திரமான வகையில் தங்களது கடமைகளை செய்வதற்கான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அரசாங்கம் என்றவகையில் பொலிசாருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



