ரணிலின் வீட்டுக்குத் தீ வைத்தவர் நாட்டை விட்டு தப்பியோட்டம்
பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள், நாட்டில் இருந்து தப்பிச் செல்வதை தடுக்கும் முயற்சிகளை பொலிஸ் கண்காணித்து வருகிறது.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம், கொழும்பு 03 இல் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை தீ வைத்தமை மற்றும் நாடாளுமன்றத்திற்கு அருகில் வன்முறைகளை ஏற்படுத்தியமை தொடர்பில் குறைந்தது 50 பேர், பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சேகரிக்கப்பட்டு வரும் ஆதாரங்கள்
இது தொடர்பிலான காணொளிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தேவையான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பொலிஸ் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், ஏனையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
பாதுகாப்புச் சோதனைகள்
நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடியிருப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.