கோட்டாபயவிடம் இல்லாத மகிந்தவின் ஆளுமை! மொட்டுவின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாத நிலை
பொதுஜன பெரமுன அரசியலில் என்றும் இரண்டாம் பட்சமாகாது. எமது ஆதரவு இல்லாமல் இனிவரும் காலங்களில் எவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்கள் எதிர்பார்த்ததை எம்மால் நிறைவேற்ற முடியவில்லை.
நிறைவேற்றுத்துறையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது. அரச தலைவர் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
பொதுஜன பெரமுன அரசியலில் என்றும் இரண்டாம் பட்சமாகாது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஆளுமை கோட்டாபய ராஜபக்சவிற்கு இருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும்.
பொருளாதார பாதிப்பு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிக்கு இறங்கி போராடினார்கள்.
மக்கள் போராட்டத்தை குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறக்கணித்து செயற்பட ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.பொதுஜன பெரமுன அரசியலில் என்றும் இரண்டாம் பட்சமாகாது. எமது ஆதரவு இல்லாமல் இனிவரும் காலங்களில் எவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
