ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவா கோட்டாபய மக்களால் விரட்டப்பட்டார்..! அரசாங்கத்திடம் கேள்வி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர் யார், உங்கள் முன்னாள் தலைவர் கோட்டாபயவா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி வினவியுள்ளார்.
அத்துடன் அதற்காகத்தான் அவர் மக்களால் விரட்டப்பட்டாரா, எதற்காக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆட்சியைப் பிடிப்பதற்காகவா அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவை அனைத்தையும் நாட்டுக்குக் கூற வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சூத்திரதாரியை அரசாங்கம் மறைத்து வைத்துள்ளது. நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிழையான யோசனைகள்
அதே தீர்ப்பை 2019 இல் இருந்து பொருளாதாரத்தைச் சீரழித்தவர்களுக்கும் நீதிமன்றம் கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இன்றும் அமைச்சர்களாக உள்ளனர்.
இன்றும் நாட்டைச் சீரழிக்கின்றனர். சிரேஷ்ட அமைச்சர்களுக்கு நான் எதிரானவன். அவர்கள்தான் இந்த நாட்டைச் சீரழித்தவர்கள். அவர்கள்தான் பிழையான யோசனைகள் வழங்குபவர்கள்.
நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து கட்டியெழுப்புவது எப்படி என்று யோசிக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமாக ஆட்சிக்கு வந்ததும் பிரச்சினையைத் தீர்ப்போம் என்றார்கள்.
கோட்டாபய மக்களால் விரட்டப்பட்டது ஏன்?
அது நடந்ததா? இல்லை. இந்தத் தாக்குதலை நடத்தியவர் யார் ? உங்கள் முன்னாள் தலைவர் கோட்டாபயவா? அதற்காகத்தான் அவர் மக்களால் விரட்டப்பட்டாரா? எதற்காக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது?
ஆட்சியைப் பிடிப்பதற்காகவா அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது?
நீங்கள் நாட்டுக்குக் கூற வேண்டும். தர்க்கரீதியாக நீங்கள் பிழையை சரி செய்து வெற்றி கொள்ளலாம். ஆனால், மனச்சாட்சியின்படி நீங்கள் தோல்வியடைவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.