சட்டச் சிக்கலில் மாகாண சபைத் தேர்தல்
எல்லை நிர்ணயம் மற்றும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் தயாராகவில்லை என அதன் தலைவர் நேற்று (14) தெரிவித்துள்ளார்.
விகிதாசார வாக்கெடுப்பு முறையில்
தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு பல புதிய சட்டதிட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
அந்தச் சட்டதிட்டங்கள் நிறைவேற்றப்படும் வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.
"பழைய முறை (விகிதாசார) வாக்கெடுப்பு முறையில் நடத்தப்பட வேண்டும் எனச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில், எல்லை நிர்ணயம் தேவைக்கேற்ப செய்யப்பட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநரின் ஆட்சியில்
பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனிநபர் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அத்தோடு அக் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் அது தொடர்பிலான சட்டத்திருத்த நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்,
ஆனால் அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அதை முன்னெடுத்துச் செல்ல எந்த முயற்சியும் எடுக்காததால் அது சட்டமாக்கப்படவில்லை.
அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின்படி, இந்த நாட்டில் ஒன்பது மாகாண சபைகள் செயல்பாட்டில் உள்ளன,
மேலும் ஒன்பது மாகாண சபைகளும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநரின் ஆட்சியின் கீழ் உள்ளன.
இதற்கிடையில், பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மாகாண சபைகளை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |