பிரேமதாசா மற்றும் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பால் ஏற்பட்ட குளறுபடி! மாகாணசபைக்கு நடந்தது என்ன?
13ஆவது திருத்தத்தில் உள்ள பல அதிகாரங்கள் கொழும்பு அரசாங்கத்தால் பறிக்கப்பட்டு விட்டது. பல அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த மறுதலித்து வருகின்றது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபையில் ஈபிஆர்எல்எவ், ஈஎன்டிஎல்எவ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, போன்றவை பங்குபற்றியிருந்தன.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையில் திருகோணமலையை தலைநகராகக் கொண்டு ஒரு மாகாணசபை அமைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு மார்ச் வரை அந்த மாகாணசபை நடைமுறையில் இருந்தது. பின்னர் பிரேமதாசா மற்றும் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு காரணமாக அந்த மாகாணசபை முடக்கப்பட்டது.
1988இலிருந்து 2006ஆம் ஆண்டுவரை வடக்கு கிழக்கு இணைந்த மாகாண நிர்வாகம் செயற்பட்டு வந்தது. 2006ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அனுசரணையுடன் ஜேவிபி நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கு இணைப்பைத் துண்டித்தது.
இன்று வடக்கு மாகாண சபை கிழக்கு மாகாண சபை என்று இரண்டு மாகாண சபைகள் தோற்றம் பெற்றுள்ளன. மாகாண சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரமே 13ஆவது திருத்தம் என்று கூறப்படுகின்றது.
இந்த 13ஆவது திருத்தம் என்பது ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்தான் கொண்டுவரப்பட்டது. இந்த அதிகாரங்கள் போதுமானவரை அல்ல என்பதும் ஒற்றையாட்சி என்பது மற்றப்பட வேண்டும் என்பது ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோரிக்கை என்று அன்றே இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவிற்கும் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் சொல்லப்பட்டது.
இருந்தாலும் கூட அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ஆம் ஆண்டுவரை நீடித்தது. மக்கள் தனிநாடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தனர். ஆனால் 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் இலங்கை அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
ஆனால் எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இப்பொழுது மிச்சமாக இருப்பது இந்த 13ஆவது திருத்தம் மாத்திரம்தான். இதனையும் இல்லாமல் செய்வதற்கு கோட்டாபய அரசாங்கம் முயற்சி செய்கின்றது.
இந்த 13ஆவது திருத்தத்தில் உள் ளபல அதிகாரங்கள் கொழும்பு அரசாங்கத்தால் பறிக்கப்பட்டு விட்டது, பல அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த மறுதலித்து வருகின்றது. ஆகவே நாங்கள் தற்போது அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள இந்த 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.
இதனுடைய பொருள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை இதனுடன் தீர்ந்துவிட்டது என்பதில்லை. அது சம்பந்தமாகத் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.
அதற்கான சர்வதேச ஆதரவுகள் திரட்டப்பட வேண்டும். அதேநேரம் அரசியல் சாசன ரீதியாகக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை எடுத்துக் கொள்வது தமிழ் மக்களின் கடமையாகும். இவை அற்ப சொற்பமாக இருந்தாலும் எமக்கு உரித்தானது. உரித்தானவற்றை விட்டுக் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. ஆகவே தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள தற்காலிகமாகவேனும் முழுமையான 13ஐ கையேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.