ஜனாதிபதியிடம் நல்லிணக்கத்தை கோரும் போராட்டகாரர்களின் அமைப்பு
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் சார்பில் கறுப்பு தொப்பி(Black Cap Movement ) அமைப்பு ஜனாதிபதியிடம் நல்லிணக்க செயற்பாட்டை கோரியுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம் அந்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. அமைதியான போராட்டகாரர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவான உங்களது செயற்பாடுகளை எமது அமைப்பு கண்காணித்து வருகிறது.
அரசியல் மாற்றத்திற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது
நாட்டை கட்டியெழுப்பவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் 30 ஆண்டு கொடிய போருக்கு பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தது என்பது நீங்கள் அறிந்த விடயம்.
எனினும் அந்த அரிய சந்தர்ப்பத்தை போரின் முடிவின் போது ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் கை நழுவவிட்டனர். இலங்கையில் ஏற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மக்கள் எழுச்சி காரணமாக தெளிவான அரசியல் மாற்றத்திற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
எனினும் இந்த மக்கள் எழுச்சியுடன் சம்பந்தப்பட்ட அப்பாவி, நிராயுத பாணிகளான மக்கள் மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது வருத்தத்திற்குரிய விடயம்.
அரச கட்டமைப்புக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் அவசியம்
இதனால், இந்த சந்தர்ப்பத்தில் போராட்டகாரர்களுக்கு அரச கட்டமைப்புக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகியுள்ளது.
இதற்கு தேவையான தலையீடுகளை மேற்கொள்ள அமைதியான போராட்ட அமைப்பு என்ற வகையில் கறுப்பு தொப்பி அமைப்பு தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கறுப்பு தொப்பி அமைப்பு மற்றும் லிபரல் சகோதரத்துவம் ஆகிய அமைப்புகள் காலிமுகத்திடல் போராட்டத்தை ஆரம்பித்த அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.