மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கருநிலம் என்னும் தொனிப் பொருளில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று(23) இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பறை முழங்கி மக்களுக்கு போராட்டத்தின் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
போராட்டம்
அதன் பின்னர் 'இந்த மண் எங்களின் உரிமை', 'எங்கள் எதிர்காலத்திற்கான வளத்தை அழிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி வழியாக கடை வீதியூடாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியில் சென்று தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதன்போது வவுனியா மாவட்ட இளைஞர்கள், மன்னார் மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், கலைஞர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






