சிவசேனை அமைப்பினர் முன்னெடுத்த போராட்டத்தில் குழப்பநிலை
யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறித்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
உள்நுழைந்த குழு
இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது, அதே சமயம் கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் திரேசாவுக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து கப் ரக வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று தெரேசா பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டியதாகவும் கூறப்படுகின்றது.









