இடமாற்றம் என்ற பெயரில் பழிவாங்கல்: போராட்டத்தில் குதித்துள்ள ஆசிரியர்கள்
வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் சிலர் நேற்றைய தினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுற்றுநிரூபத்திற்கு ஏற்ப அதை ஏற்று வெளிமாவட்டங்களில் சேவை செய்ய சென்ற தம்மை தேவை கருதிய சேவை இடமாற்றம் என்ற பெயரில் திட்டமிட்டு பழிவாங்குவதை ஏற்க முடியாதெனக் கூறி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டத்தை முன்னெடுத்துள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமக்கு நியாயம் கிடைக்கும் வரை இன்று காலை 8 மணிமுதல் வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில். ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
பல வருடங்களாக வெளிமாவட்டங்களில் பணிபுரிந்த நிலையில் இடமாற்றம் என்ற பெயரில் மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து கூறிய இலங்கை அசிரியர் சங்கம், தொடர்ந்தும் குடும்பத்தை விட்டு வெளி இடங்களில் சேவையை முன்னெடுப்பதால் ஆசிரியர்களின் குடும்பங்கள் பிரியும் நிலையும் உருவாகி வருகிறது.
தாபன விதிக் கோவைக்கு முரணாக, இடமாற்ற மேல்முறையீட்டுச் சபை என்ற போர்வையில் பழிவாங்கும் நோக்கத்துடன் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக நாம் சேவையின் தேவை கருதிய இடமாற்ற சபையில் இருந்து வெளியேறியிருந்தோம்.
பழிவாங்கும் சம்பவம்
இதன் பின்னர் ஏற்கனவே 2025ஆம் ஆண்டு சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் தவிர்க்கப்பட்ட ஒருவரை மீளவும் 2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்திலும் உள்வாங்காது பழிவாங்கும் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் அவ்வாறானவர்களை மீளவும் தரவுகள் விவரங்கள் ஏதும் கைவசம் இல்லை என கூறி இடமாற்றத்தில் உள்வாங்கியுள்ளனர்.
குறிப்பாக சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் நிபந்தனைகளுடன் வெளிமாவட்டங்களுக்கு இடமாறிச் சென்றவர்கள், தொடர்ச்சியாக 8 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக மட்ட்டுமல்லாது சிலர் 15 ஆண்டுகளாகவும் இவ்வாறு பணியாற்றி வருகின்றனர்.
எமது போராட்டத்தின் ஒரு அங்கமாக வடக்கின் ஆளுநரை சந்தித்து எமது நிலைமைகளை எடுத்துக்கூறி தீர்வை கோரினோம். ஆனால் அவரும் தீர்வுக்கு பதிலாக முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதனால் எமது போராட்டத்தை நாம் தொடரவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.







