சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நியமனம் தொடர்பான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் நியமனம் தொடர்பில் பொய் பரப்புரைகளை ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்க தலைவர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்து மட்டக்களப்பில் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள், வைத்தியர்கள், சுகாதார சிற்றூழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்க தலைவர் ரவி குமுதேசுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், தவறான வார்த்தை பிரயோகத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்துடன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் அச்சுறுத்தல் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு பணிப்பாளரை கேவலப்படுத்தும் வகையில் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்க தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த கருத்துகளை அவர் வாபஸ் பெற வேண்டும். பணிப்பாளரிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் சங்க தலைவரின் கருத்தானது பணிப்பாளரை நியமனம் செய்துள்ள ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு எதிரான கருத்து.
மேலும் இது முழு சுகாதார துறையினையும் கேவலப்படுத்தும் வகையிலான கருத்து எனவும் குறிப்பிட்டுள்ளனர்.