தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி
தனியார் நிறுவனங்களும் முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க முடியாது என அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை கருத்திற்கொண்டு தனியார் நிறுவனங்களும், தமது ஊழியர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு அண்மையில் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை இந்த மாதம் முதல் தனியாருக்கு வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில், தொழில் தருணர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது.
கூட்டத்தின் போது, கோவி - 19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் பிற பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, தங்களால் கொடுப்பனவை வழங்க முடியாது தொழில் தருணர்கள் கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் தருணர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும், எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து உரிய தீர்மானம் எடுப்பதான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களைப் போலவே தனியார் துறை ஊழியர்களாலும் வாழ்க்கைச் சுமை உணரப்படுவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தார்.
இம்மாதம் முதல் ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அண்மையில் அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, தனியார் துறையினருக்கும் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தனியார் துறை முதலாளிகளுடன் கலந்தாலோசித்து எடுப்பதற்கு தொழில் அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், இலங்கையின் தனியார் நிறுவனங்களும், முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 7 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam