தனியார் பேருந்து சேவையினருக்கும் அரச பேருந்து சாலையினருக்கும் இடையில் முரண்பாடு(Video)
கிளிநொச்சியில் தனியார் பேருந்து சேவையினருக்கும் அரச
பேருந்து சாலையினருக்கும் இடையில் பரஸ்பர கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு இழுத்தடிப்பு செய்த நிலையிலே இவ்வாறு முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து முரண்பாடு
தமது பேருந்துகளை உள்ளே அனுமதித்தால்தான் அடுத்தகட்டம் தொடர்பில் பேச முடியும் என சாலை நிர்வாகத்தினர் கூறிய நிலையிலேயே இரு தரப்பினருக்குமிடையில் நேற்று(05) மாலை 6 மணிவரை கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அரச பேருந்தினை வீதிக்கு குறுக்காக நிறுத்தியுள்ளமையால் கனகபுரம் பிரதான வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் வழங்கினால்தான் பேருந்தினை அப்புறப்படுத்துவோம் என தெரிவித்து தனியார் பேருந்து சேவையினர் கோரி வந்துள்ளனர்.
பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்த போதிலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீண்டநேரம் எடுத்துள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பேருந்தினை அப்புறப்படுத்தமாறு பொலிஸார் கடும் தொணியில் சாலை நிர்வாகத்தினரிடம் தெரிவித்ததையடுத்து பேருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அரச பேருந்து சாலை நிர்வாகத்தினரின் கடமை நேரமான 4.30 மணி நிறைவடையும்வரை இழுத்தடிப்பு செய்து தனியார் பேருந்து உரிமையாளர்களிற்கான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பரஸ்பரம்
இதனையடுத்து எரிபொருள் வழங்க முடியாது எனவும், இன்று(6) 10 மணிக்கு வருமாறும் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் பேருந்துகளை அப்படியே நிறுத்திவிட்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அரச பேருந்துகளை உள்ளேயோ அல்லது வெளியேயோ செல்ல முடியாதவாறு தாம் பேருந்துகளை தரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் பேச்சுவார்த்தை நடாத்தி இன்று(6) காலை 7 மணிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க சாலை நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் உறுதியளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் அப்புறப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.