ஒரு நாடு-ஒரு சட்டம் தொடர்பான அறிக்கையை குப்பையில் எறிய ஜனாதிபதி தயாரா:ரவூப் ஹக்கீம் கேள்வி
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரு நாடு-ஒரு சட்டம் சம்பந்தமான ஜனாதிபதி செயலணிக்குழுவின் அறிக்கையை குப்பை கூடையில் வீச ஜனாதிபதி தயாராக இருக்கின்றாரா என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக மக்களுக்குள் முதலில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி மிக சிறந்த அக்கிராசன உரையை நிகழ்த்தினார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி தன் மீதுதான குற்றச்சாட்டுக்களை சரி செய்ய வேண்டும்
அவரது உரையில் உள்ளடங்கியுள்ள சாதகமான விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் அவருக்கு இருக்குமாயின் குறைந்தது அவருக்கு எதிராக இருக்கும் சில குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுப்பட வேண்டுமாயின் அந்த குற்றச்சாட்டுக்களை அவர் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியவர்களுடனேயே அவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பத கண்டறிய வேண்டும்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டறிய நேர்மையான எண்ணத்தில் செயற்பட்ட ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகள் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இப்படியான அதிகாரிகளை மீண்டும் இந்த விசாரணைகளில் ஈடுபடுத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்தி, இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும். அவர்களின் நோக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
இவற்றை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா என இந்த சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
அப்படியில்லை என்றால் குறைந்தது ஒரு நாடு, ஒரு சட்டம் எனக்கூறி நாட்டின் இனங்கள், மதங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்திய பிக்கு தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழுவின் அறிக்கை குப்பை கூடையில் எறிய ஜனாதிபதி தயாராக இருக்கின்றாரா?.
இதற்கு ஜனாதிபதியாக பதிலளிக்க முடிந்தால், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தொடர்பில் நம்பிக்கை உருவாகும் எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு