தொழிற்சங்க நடவடிக்கையால் தொடரும் சிக்கல் : மின் விநியோகத்தில் ஏற்பட்ட தடை
நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை காரணமாக சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் விநியோகத் தடையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நிறுத்தப்படும்
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று(06.10.2025) முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என்று அதன் செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மீண்டும் ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மின்சார பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை அதிகரிக்க
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் எம்.டி.ஆர். அதுல இதனைத் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று இலங்கை மின்சார சபை புதிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்கவும் கூறினார்.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால், அது கட்டுமானத் துறைக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகரவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



