வவுனியாவில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள்: மாவட்ட செயலக அதிகாரிகள்
வவுனியாவில் பெட்ரோல் விநியோகத்தில் முதல் கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதனை வழங்குவதற்கான இணையவழி பதிவுகள் முழுமையாக இடம்பெறும் என மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோக நடைமுறை குறித்து நேற்று மாவட்ட செயலக அதிகாரிகளிடம் மக்கள் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் ஊடாக பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேவை
பெட்ரோல் பெறும் அனைத்து வாகனங்களும் இணையவழியில் பதிவு செய்யப்படுவதுடன் பெட்ரோல் கிடைக்கப்பெறும் அளவு மற்றும் தேவைப்பாடு என்பவற்றுக்கு ஏற்ப எரிபொருள் விநியோக அளவுகளில் மட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களது முச்சக்கரவண்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவதற்கான புதிய நடைமுறை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், டீசல் விநியோகம் தொடர்பில் அவசர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இரசேந்திரங்குளத்தின் கீழான பகுதிகளில் அறுவடை ஆரம்பித்துள்ளதால் அவர்களது அறுவடைக்கு தேவையான 3000 லீட்டர் டீசல் விநியோகம் இன்று முதல் இடம்பெறும்.
வவுனியாவில் சிறுபோகத்தில் 12238 ஏக்கர் நெல் செய்கை இடம்பெற்றுள்ளது. வருகின்ற ஜுலை முதல் கிழமையில் இருந்து ஆகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும் என எதிர்பார்கின்றோம்.
இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கும் மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது. அதனால் இந்த கோளாறுகளை ஒழுங்குபடுத்தி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
டிப்பர் முதலான கனரக வாகனங்களுக்கான டீசல் விநியோதகத்தில் மட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.
வவுனியாவில் பதிவு செய்யப்பட்ட தொழில் ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்கும் கனரக வாகனங்களுக்கு டீசல் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கவுள்ளதுடன் ஏனைய மாவட்ட டிப்பர் போன்ற கனரக வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படவுள்ளன.
வவுனியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெறுவது குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சுகாதார துறையினருக்கு நீண்ட நாட்களின் பின் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடன் சுகாதார பிரிவு வைத்தியர்கள் உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்காக கடந்த ஒரு வாரத்தின் பின்னர் 6600 லீட்டர் எரிபொருள் நேற்று (23) கிடைக்கப்பெற்றுள்ளது.
பிரச்சினை
கடந்த சில நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் நின்ற காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மக்களுக்கு வழங்காத காரணத்தினால் இளைஞர்கள் சிலர் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் வீதியூடான போக்குவரத்து சுமார் இரு மணிநேரம் தடைப்பட்டுள்ளது. ”அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோலா அதனை மக்களுக்கு வழங்குங்கள்’ என்று கோசமிட்டவாறு வீதியினை மறித்து இளைஞர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அங்கு பதட்டமான நிலையினை ஏற்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் படையினர்,குறித்த பகுதிக்க வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்வு
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (24) சுகாதார பிரிவினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்ட எரிபொருளினை மக்களுக்கு வழங்க மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.
செய்தி: முல்லை கீதன்
மன்னார்
மன்னாரில் இன்று(24) மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் எரிபொருள் மற்றும் எரிவாயுகளை பெற்று கொள்வதற்கு வரிசையில் காத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் முகவர் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி லாப் எரிவாயுக்களை மக்களுக்கு வழங்காமல் உரிமையாளர் பதுக்கி வைத்துள்ளதாக அந்த விற்பனை முகவர் நிலையத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலையீடு
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிரதேச செயலாளர் ம.பிரதீப் இந்த விடயம் தொடர்பில் தலையிட்டுள்ளார்.
சொந்த பாவனைக்கு என்ற பெயரில் வழங்கப்படாமல் களஞ்சியப்படுத்தி வைக்கப்படிருந்த 21 எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
தீர்வின்மை
மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிவாயு இன்மையால் எரிவாயு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் பெறுவதற்கு காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் திட்டமிட்ட முறையில் நடை முறைப்படுத்தப்படாமையினால் எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஆஷிக்
மன்னார்- தலைமன்னார்
மன்னார் நகர பகுதிகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை(24) அதிகாலை தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுகாதார ஊழியர்
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அனுமதி பெற்ற சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்று செல்வதக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட நடவடிக்கை
திணைக்கள தலைவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ,கிராம சேவகர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஆஷிக்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் எரிபொருளினைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள்
மட்டக்களப்பு - வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபடும் விசாயிகள், மீனவர்கள், வாகனங்களை கொண்டு அன்றாட தொழில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்திற்கான எரிபொருளினை பெற்றுக் கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது விவசாய செய்கையின் அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையிலும், தோட்டச் செய்கை மேற்கொள்ள டீசல் தேவைப்படுவதுடன், கடற்றொழில் செல்லும் மீனவர்களுக்கும் டீசல், மண்ணெண்ணெய் தேவைப்பாடு அதிகமான காணப்படுகின்றது.
எரிபொருளை நம்பி தொழில் செய்பவர்கள் டீசல், மண்ணெண்ணெய், என்பவற்றினை பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (24) முன்னுரிமை அடிப்படையில் எதுவித பாகுபாடுகளுமின்றி கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களது தொழிலை திறம்பட மேற்கொள்வதற்கு டீசல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு தமிழ், முஸ்லிம் மீனவர்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு சில நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றதுடன் அதனை பெறுவதற்கு பெருந்திரளான மக்கள் வரிசையின் நீண்ட நேரம் காத்திருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு
தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு நாளை இதற்காக தியாகம் செய்ய வேண்டிய நிலை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு காணப்படுகின்றது.
செய்தி:நவோஜ்

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
