“இருப்பை தக்கவைத்து கொள்வதற்கு இவர்கள் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண்” - சதாசிவம் வியாழேந்திரன்
வர இருக்கின்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு இவர்கள் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalenthiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மண் அனுமதிப்பத்திரம் தொடர்பில் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனது கட்சி சார்ந்தவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருக்கின்றார்கள். அதேபோல் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் சார்ந்தோரும் அதற்கான விளக்கத்தினை அளித்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் எனது விளக்கத்தையும் நான் வழங்க வேண்டிய கடைப்பாட்டில் இருக்கின்றேன். சாணக்கியன் உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை உயரிய சபையான நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
என்னுடைய சகோதரர் சதாசிவம் மயூரனின் பெயரிலும் மண் அனுமதிப்பத்திரம் இருப்பதாக அவர் இதன்போது கூறியிருக்கின்றார். அதேவேளை இதன்போது பசில் ராஜபக்சவை விழித்து அவர் இதனைப் பேசியிருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் என்ன உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை நாடாளுமன்றத்தில் பசில் ராஜபக்சவை விழித்துக் கூறியமைக்கான நோக்கம் என்ன? என்று பார்த்தால் சண்முகநாதன் மயூரனுக்கும் சதாசிவம் மயூரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பொய்யான தகவலை வழங்கியிருப்பது என்பது இவருடைய எதிர்கால அரசியலுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியும்.
காரணம் மக்கள் இவர்களை நிராகரிப்பார்கள், ஏன் என்றால் உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொன்னவர்களைக் கடந்த காலங்களில் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள். இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லி ஒரு அரசியல் நடத்த வேண்டுமா? அதே போன்று பெருமாள் சந்திரகுமாரைப் பரமசிவம் சந்திரகுமார் ஆக்கியிருக்கின்றார்கள்.
இது ஒரு ஆரோக்கியமான அரசியலா? அதேவேளை நான் ஒரு பிழை விட்டால் நான் என்னைத் திருத்திக்கொள்வேன். பிழைகளை நியாயப்படுத்த நான் விரும்பமாட்டேன். எனது தம்பியின் பெயரில் மண் அனுமதிப்பத்திரம் இருந்தால் அதனை நான் கண்டிப்பேன்.
என்னுடைய வீட்டில் வுறோணி எனும் நாய்க்குட்டி இருக்கின்றது. அதனுடைய பெயரிலும் கூட மண் அனுமதி பத்திரம் இல்லை. ஆனால் சிலவேளை அதுவும் நாடாளுமன்றத்திற்கு வருமோ தெரியாது? அதற்கும் ஒரு அப்பாவின் பெயரை வைத்து அனுமதி பத்திரம் இருப்பதாக கூறினாலும் கூறுவார்கள்.
ஏன் என்றால் அரசியலுக்காக ஆதாரமில்லாத கருத்தையே இவர்கள் கூறுவார்கள். இவர்களது பொய்யான கருத்துக்களை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வர இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வில் நான் அது தொடர்பான விளக்கத்தையளித்து அந்த விடையத்தை ஹன்சாட்டிலே இருந்து நீக்குமாறு சபாநாயகரை கோர இருக்கின்றேன்.
இவர்கள் எதிர்வரும் தேர்தலுக்காகவே மக்கள் மத்தியில் பிழையான செய்திகளைக் கூறி மக்கள் மத்தியில் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
அவர் கூறிய இலக்கத்தைக் கொண்ட மண் அனுமதி பாத்திரத்தில் சண்முகநாதன் மயூரன் என்பவருக்கே மண் அனுமதிப்பத்திரம் இருக்கின்றது. இதை புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாங்கள் இந்த மண் விடையம் தொடர்பில் பல வேலைத்திட்டங்களை செய்து கொண்டே வருகின்றோம், சில இடங்களில் சில விடையங்களைத் தடுத்து இருக்கின்றோம்.
சில விடயங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அதேவேளை புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பல விடையங்களைச் செய்துகொண்டு வருகின்றோம்.
தயவுசெய்து தங்களுடைய வங்குரோத்து அரசியலைத் தக்கவைப்பதற்காகவோ எங்களை தாக்குவதற்காகவோ இவ்வாறாகப் பொய்களைக் கூறாதீர்கள். நீங்களும் வாங்க இந்த மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பதற்காகப் பல திட்டங்களை வகுப்போம்.
உங்களது ஆலோசனையைச் சொல்லுங்கள். அவற்றையும் உள்வாங்குவோம். நடைமுறைப்படுத்துவோம். அதற்காகப் பொய்யான விடயங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். அதே வேளை சாணக்கியன் தமிழ் படிக்க வேண்டும்.
இவருக்குச் சதாசிவத்திற்கும் சண்முகநாதனுக்கும் வித்தியாசம் விளங்கவில்லை. எமது மாணவர் ஒருவர் ஆரம்ப பிரிவு ஆசிரியராக இருக்கின்றார். இவர் வேண்டுமானால் அவரிடம் தமிழைக் கற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
