முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது ஏன்? - சாணக்கியன் கேள்வி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்து கோசம் எழுப்பினேன். ஆனால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மரணமான சிறுமி குறித்து நீதி நிலை நாட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டேன். அது குறித்துப் பல விமர்சனங்கள் எழுகின்றன . அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்துக் களவாடப்படும் மீன்கள், சுருக்குவலைகள் தொடர்பில் இன்று (23) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலதடவைகள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் மீனவர்களின் பிரச்சினைகளைப் பேசியுள்ளேன். ஆனால் எவ்வித பயனுமில்லாமல் இருக்கும் இவர்களுக்குப் பாடம் புகட்டும் நடவடிக்கையாக அம்பாறை- கல்முனை வீதியை அரை மணித்தியாலயமாவது முடக்கி மீனவர்களின் பிரச்சினையை உரியவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். முடக்குங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். முடக்கி உங்கள் சக்தியைக் காட்டுங்கள் .
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உள்ள நிலையிலும் என்னையும் இங்கு கலந்து கொண்டிருக்கும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனையும், நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமில்லை. அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள். அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர்ப் பலகையில் மாற்றம் வருமே தவிரத் தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதுமில்லை.
இது தொடர்பில் நான் பெரிதாகப் பேசுவதில்லை என்கிறார்கள். இதில் பேச ஒன்றுமில்லை. இதனை வைத்துக் கொண்டு அரசியல் மட்டுமே நடக்கிறது. சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவேன். கல்முனை பிராந்தியத்திற்குத் தடுப்பூசி வழங்கவேண்டும் என்று நான் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் பேசினேன் எனத் தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri