த.தே.கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளது: கோவிந்தன் கருணாகரம் (VIDEO)
இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்திற்குள் இல்லாமல் இரு இணைத்தலைமை உருவாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இரண்டு பொலிஸ் நிலையம் ஊடாக வழக்குகள் பொத்துவில் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது.பொத்துவில் பொலிஸாரும், திருக்கோவில் பொலிஸாரும் இரண்டு வேறுபட்ட வழங்குகளை போட்டிருந்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வழக்காக அது தெரியவில்லை, ஏற்கனவே திட்டமிடப்பட்டு 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியல் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பொலிஸ் நிலையத்திலும் அதேபெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் அங்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் அவர்களது உரிமைகளை கேட்டு போராடும்போது அவர்களை நசுக்குவதற்காகப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே சிலரது பெயர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.
சிறுபான்மை மக்களை நீதித்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம். எந்தவொரு நாடும் மூன்று துறைகள் ஊடாக ஆளப்படுகின்றது. நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டவாக்கத்துறை. இதில் இந்த மூன்று துறைகளும் இலங்கையில் சீர்குலைந்துள்ளது, ஸ்தம்பிதமடைந்துள்ளது.
நீதித்துறை முறையாகச் செயற்படவில்லையென்பது இவ்வாறான வழக்குகள் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. சட்டவாக்கத்துறை ஒழுங்கில்லையென்பது சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான சபை அமர்வு 11ஆம் திகதி கூடுவது எனத் தீர்மானித்திருந்தும் ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதன் ஊடாக சட்டவாக்கத்துறையும் சீரில்லாமல் உள்ள நிலையே உள்ளது. நிர்வாகத்துறையினை எடுத்துக்கொண்டாலும் இந்த நாட்டில் மிக மோசமான நிர்வாகம் இருக்கின்றது என்பது அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையில் ஆணையாளர் நியமனங்களிலிருந்தே நிர்வாகத்துறை சீர்கேடான நிலையிலிருக்கின்றது என்பது இதன்மூலம் வெளிப்படையாகத் தெரிகின்றது.
ஜனாதிபதியின் செயலாளரால் தான் இந்த நாட்டில் நிருவாகம் சீர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஷ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
மட்டக்களப்பு மாநசபையைப் பொறுத்தமட்டில் கடந்த முதலாம் திகதி ஆளுநரால் மாநகரசபைக்குப் புதிய ஆணையாளர் நியமிக்கப்படுகின்றார். இருந்த பழைய ஆணையாளருக்கு இடமாற்றம் வருகின்றது. புதிய ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்று அன்று பிற்பகலிலே திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார்.
மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பின்பு பழைய ஆணையாளர் திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். அதேவேளை புதிய ஆணையாளர் காலையில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்று தனது உத்தியோக பூர்வ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுகின்றார். அன்று பிற்பகலில் புதிதாக ஒரு தொலைநகல் வருகின்றது.
புதிய ஆணையாளர் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல பழைய ஆணையாளர் மீண்டும் மாநகரசபைக்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றார். ஒரு நிருவாகத்தை அரசியல் எந்தளவுக்குக் குழப்புகின்றது என்பதற்கு உதாரணமாக எதிரணி உறுப்பினர் ஒருவரைப் பார்த்து அந்த ஆணையாளர் நமது தலைவர் சாதித்து விட்டார் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத கைங்கரியத்தைச் செய்துள்ளார் என்று கூறுவது இணையத்தளங்களில் பரவியிருக்கின்றது.
அது என்ன கைங்கரியம் ஒரு துஷ்பிரயோகம் நடத்தும் ஆணையாளரை மீண்டும் கொண்டு வந்ததுதான் அந்தக் கைங்கரியம். ஒரு நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்தால் அந்த நாடு எவ்வாறு அபிவிருத்தியை அடையும் என்பதற்கு இந்த மாநகரசபையில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு அமைத்திருக்கும் அந்த ஆட்சியைக் குழப்புவதற்காகவும், இந்த மாவட்டத்திலே மாநகரசபையினால் செய்யப்படும் அபிவிருத்தியைக் குழப்புவதற்காகவும் இப்படியொரு நிருவாக சீர்கேட்டைச் செய்திருக்கின்றார்கள்.
இது மிகவும் வருந்தத்தக்கத்துடன், மாநகர மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்த வரைக்கும் 20வருடங்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பதியப்படாத நிலையிலுள்ள ஒரு அரசியல் கூட்டாகவே இருக்கின்றது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மலையக கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முன்னணியை உருவாக்கியிருந்தார்கள். மூன்று வருடத்திற்குள்ளே அவர்கள் அதனை ஒரு அரசியல்கட்சியாகப் பதிவுசெய்துள்ளார்கள். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகச் சம்பந்தர் தொடர்ச்சியாக இருந்துவருகின்றார்.
தற்போது பத்திரிகை ஊடாக சம்பந்தர் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்யப்போவதாக அறியக்கூடியதாகவுள்ளது. இத எந்தளவுக்கு உண்மையென்று தெரியாவிட்டாலும் அப்படியொரு நிலைமையேற்பட்டால் நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக இருப்பவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வலிதற்றதாகும் போது தலைமை பொறுப்பையும் இழப்பார்.
இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து விலத்த வேண்டிய தேவையில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வகிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்க வேண்டும் என்ற நியதியில்லை.
அவர் விரும்பி தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பதவியைத் துறப்பாரானால் தமிழ்த் தேசிய கூட்டத்தின்
ஆரம்பத்திலிருந்து அங்கம் வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை
இயக்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது. இனியும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பதியப்படாமலிருக்கமுடியாது.
ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்திற்குள் இல்லாமல் இணைத்தலைமையொன்று
உருவாக்கப்படவேண்டும் என்பதிலும் உறுதியாகவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.