மக்களின் பிரச்சினையை தீர்க்கவே நாங்கள் போராடுகின்றோம் - முஸர்ரப் முதுனபீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை அடாவடித்தனமாகக் கைது செய்திருக்கும் இவ் அரசாங்கம், நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தி அவருக்கான தீர்பை உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி முஸர்ரப் முதுனபீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தலைவரின் கைதை கண்டித்தும், எமது துக்கத்தை வெளிக்காட்டும் முகமாகவும் எதிர்வரும் பெருநாள் தினத்தன்று எமது வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்க விட்டு முஸ்லிம்கள் ஆகிய நாம் பிரதேச வாதங்கள், கட்சி பாகுபாடு இல்லாத சகோதரத்துவத்தை வலியுறுத்துவோம் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று பொத்துவில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அங்கு உரையாற்றிய அவர்,
மாகாண சபை கனவில் இருக்கும் சில கட்சி முக்கியஸ்தர்களும், என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உட்படப் பலரும் புனித மிகு நோன்பு கால மாண்பையும் மீறி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளைப் பரப்பிவருகிறார்கள். இவர்கள் இறைவனைப் பயந்து கொள்ளட்டும் என இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும் தலைவரின் கைது தொடர்பில் வீணாகப் படம் காட்டுவோர் மத்தியில் உளத்தூய்மையோடு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறேன். என்னுடன் இணைந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் எம்.பி, எ.எல்.எம் அதாஉல்லா எம்.பி உட்பட பலரும் உரத்த குரலில் குரல் எழுப்பி வருகிறோம்.
தலைவர் உட்பட அநியாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தலைவர்கள், பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானமுள்ள எல்லா முஸ்லிம்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரதமர், அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்பிக்கள், அரச தரப்பு முக்கியஸ்தர்கள் போன்றோர்களைச் சந்தித்து இந்த சமூகத்தின் தேவைகள் தொடர்பிலும் பிராந்திய ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்தின் இக்கட்டான அரசியல் சூழ் நிலைகள் தொடர்பிலும் பேசி வருகிறோம்.
இது தொடர்பில் பகிரங்கமாக ஊடகங்களுக்கு சமூக நலன் கருதி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதற்காக விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதுமில்லை .
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் எனக்கு இருந்த மாறுபட்ட கருத்துக்கள் காரணமாகவே நான் அதில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் அண்மைய சாணக்கியன் எம்.பி இன் நாடாளுமன்ற உரை, கல்முனையின் அந்த அரச காரியாலயங்கள் தொடர்பிலான போதியளவு அறிவின்மை காரணமாகவே என நான் விளங்குகிறேன் .
பொத்துவில் மக்கள் அவர்களுடைய பணத்தைச் செலவழித்து அவர்களுடைய அன்பினூடாக என்னை நம்பி வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி உள்ளார்கள். மேலும் அம்பாறை மாவட்ட மக்களும் என்னை நம்பி வாக்களித்துள்ளார்கள்.
அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியே தீர்வை பெற முடியும். அதை விடுத்து எதிர் அணியில் அமர்ந்து கொண்டு கோசமெழுப்புவதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது. அ.இ.ம.கா என்பது றிசாட் பதியூதின் அவர்களுடைய தலைமைத்துவத்தை நாடி இருக்கும் கட்சி. மக்கள் காங்கிரஸின் அடையாளம் அவரே.
அவர் மக்கள் காங்கிரஸ் இல்லாது வேறு
புதியதொரு கட்சியை உருவாக்கினாலும் புதிய சின்னத்தை அறிமுகம் செய்தாலும்
மக்கள் அவரை ஆதரிப்பார்கள். அவர் சிறையிலிருந்தாலும் மக்கள் காங்கிரஸின்
தலைவர் அவரே, இருந்தாலும் அண்மையில் கட்சியில் அரசியல் பீடத்தின்
பெரும்பான்மையோர் எடுத்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.