மட்டக்களப்பில் சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது
ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரியை மொனராகலை புத்தல பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலை - புத்தல பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவதினத்தன்று குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த தாயார் ஒருவர் தனது 9 வயது மகள் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் வரும் போது அவரையம் ஏற்றிக் கொண்டுவந்து விடுமாறு கோரியுள்ளார்.
சிறுமியின் அறியாமை
இதனையடுத்து குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து ஏற்றிச் சென்ற பொலிஸ் அதிகாரி சிறுமியை மறைவான காட்டு பகுதியில்வைத்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இதன் பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஒருவருடமாக பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்தவாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதன்போது தான் குறித்த சிறுமி தனக்கு பொலிஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி தனக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாறு குறித்த அதிகாரியால் பாலியல் வன்முறை இடம்பெற்றுள்ளதாக கடிதம் ஒன்றை எழுதி ஆசிரியரிடம் கொடுத்துள்ளதையடுத்து அவர் இது தொடர்பாக அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த அதிகாரி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ள நிலையில் அவரை அங்கு வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரியை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




