முறைப்பாட்டாளர் மற்றும் அதிகாரிகளை ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது
பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரித்து விட்டதாக பதிவேட்டில் பொய்யான தகவலை பதிவு செய்து, முறைப்பாட்டாளரின் என்று போலி கையெழுத்தை இட்டு, முறைப்பாட்டாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நேற்று கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடு திரும்ப பெறப்பட்டதாக பதிவு
அத்துடன் பாணந்துறை வடக்கு பொலிஸ் சமூக பிரிவில் கடமையாற்றி வந்த சுஜீவ கருணாரத்ன என்ற இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை கெசல்வததை பிரதேசத்தில் மர ஆலை ஒன்றின் உரிமையாளரால் அச்சுறுத்தப்பட்ட ஒருவர் செய்த முறைப்பாடு மூன்று மாதங்களுக்கு மேலாக விசாரணை செய்யப்படவில்லை என பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து முறைப்பாடு தொடர்பில் பாணந்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதிவேடுகளை பரிசோதித்த போது, முறைப்பாடு திரும்ப பெறப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
5 முறைப்பாடுகளுக்கு போலி கையெழுத்துக்களை இட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்
இது குறித்து மேலும் விசாரித்த போது, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தர் இதே விதமாக 5 முறைப்பாடுகளை விசாரித்து விட்டதாக பதிவு செய்து, முறைப்பாட்டாளர் என்ற பெயரில் போலியான கையெழுத்துக்களை இட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டவர் என தெரியவந்துள்ளது.