மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடியனாறு பங்குடாவெளிச்சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
இருந்தபோதும் உழவு இயந்திரம் சமிக்ஞையை மீறி சென்ற நிலையில் பொலிஸார் அதனை துரத்திச் சென்று உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


