ரணிலுக்கு அச்சுறுத்தல் விடும் மகிந்தவின் கட்சி
இலங்கையின் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கி வருகின்ற போதும் அவ்வப்போது அச்சுறுத்தலையும் விடுத்து வருகின்றது.
அண்மையில், பசில் ராஜபக்ச அணியில் உள்ளவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சராக முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதாக அச்சுறுத்தியுள்ளனர்.
அமைச்சு பதவிகள், சலுகைகள் மற்றும் சலுகைகளுடன் செல்லும் பதவிகளை கோரியே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சு பதவிகளுக்கு கேட்கப்படும் சலுகைகள்
அமைச்சுக்களுக்கு ஒரு தனிச் செயலர், ஒரு ஊடகச் செயலர் மற்றும் மூன்று ஒருங்கிணைப்புச் செயலர்களுக்கு உரிமை உண்டு. குறித்த ஐந்து பேருக்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு.
இதற்கமைய ராஜாங்க அமைச்சர்களுக்கு ஐந்து அலுவலக ஊழியர்கள், மூன்று வாகனங்கள் மற்றும் அமைச்சர் அனுபவிக்கும் இதர சலுகைகளுக்கும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தனியாகவும், சர்வ அதிகாரமும் பொருந்திய ஜனாதிபதியாக இருப்பதால், ரணில் விக்ரமசிங்க இன்னும் இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணியவில்லை என்று அவருக்கு நெருக்கமான தரப்புகள் கூறுகின்றன.
நாடு திரும்பவுள்ள கோட்டாபய

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பு திரும்புவதற்கு தயாராகியுள்ள நிலையில், கட்சியை புத்துயிர் பெறுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு மத்தியில் கோட்டாபயவுக்கு வரவேற்பளிக்கவும் ஒரு பிரிவினர் தயாராகி வருகின்றனர்.
மீண்டும் புத்துயிர் பெறவுள்ள ஆளும் கட்சி

மேலும், கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுன இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் மீண்டும் செயற்ட தொடங்கிவிடும் என்று தம்மை பார்க்க வருவோரிடம் கூறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நபர்களின் தவறான அறிவுரைகளால் இந்த பின்னடைவு ஏற்பட்டது என்றும் கட்சித் தலைமையின் தவறு அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உதாரணமாக, இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையானது, சில தவறான நபர்களின் தவறான ஆலோசனையின் விளைவே என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
விவசாயிகளுக்கு இந்த உண்மையை கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.