கிளிநொச்சியில் வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த பன்றிகள்: 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு
கிளிநொச்சி (Kilinochchi) செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் காரணமாக இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய நட்டம்
இந்த வைரஸ்த்தாக்கம் ஏற்பட்டவுடன் பன்றி ஒரு நாள் உணவு உட்கொள்ளாது இருக்கும் என்றும் பின்னர் நடுங்க தொடங்கும். இதனை தொடர்ந்து அவை இறந்துவிடும். அதாவது நோய்த்தாக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுகின்றன என உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச் சூழல் முதல் சுகாதார துறை என அனைத்து மட்டங்களிலும் அனுமதி பெற்று பெருமளவு நிதியினை முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில தற்போது இந்த வைரஸ் தாக்கம் எனது பண்ணையை முற்று முழுதாக அழித்துவிட்டது.
மீளவும் இந்த தொழில் துறையை என்னால் ஆரம்பிக்க முடியுமா என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. அரசோ அல்லது உரிய திணைக்களங்களோ இதற்கான நட்ட ஈட்டை ஓரளவு தந்துதவினால் என்னால் மீண்டும் பன்றி வளர்ப்பு தொழிலை ஆரம்பிக்க முடியும் எனவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |