முல்லைத்தீவில் மின்சாரம் இன்மையால் அவதியுறும் மக்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் மின்சாரம் இன்மை மற்றும் வீதிகள் சீரின்றிக் காணப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பங்கள் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று(15.08.2025) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதிமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
எரிபொருளின் பயன்பாட்டில் இயங்கும்
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தேவிபுரம் (அ) பகுதியில் இரண்டாம் குறுக்குவீதி மற்றும் மூன்றாம் குறுக்குவீதிப் பகுதிகளில் 24இற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், அப்பகுதியில் 200ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் விவசாயநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் இதுவரை அப்பகுதிக்கு மின் இணைப்பு பொருத்தப்படவில்லை.
இவ்வாறு மின்இணைப்பு பொருத்தப்படாத காரணத்தினால் குறித்த பகுதிகளில் வசிக்கும் விவசாயக்குடும்பங்கள் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் மின்இணைப்பு பொருத்தப்படாமையினால் எரிபொருளின் பயன்பாட்டில் இயங்கும் நீர்இறைக்கும் இயந்திரங்களைக் கொண்டே விவசாயிகள் தமது பயிர்ச் செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றனர்.
மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமை
இதனால் எரிபொருளுக்கு அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளதாக அப்பகுதி விவசாயக் குடும்பங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மின்இணைப்புப் பொருத்துவது மற்றும் வீதிகளைச் சீரமைப்பதுதொடர்பில் தம்மிடம் கோரிக்கைக் கடிதங்களைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், மக்களால் முன்வைக்கப்பட்டகோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









