தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – கர்தினால்
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளில் கூட தற்பொழுது தேவாலயங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தற்போதைய மனித சமூகத்தில் சமய மற்றும் ஆன்மீக வாழ்க்கை மீதான ஆர்வம் வேகமாக குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் வார இறுதி நாட்களில் தேவாலயங்களுக்கு வருவதற்குப் பதிலாக, பல்வேறு பொழுதுபோக்குகள் மற்றும் வினோத நடவடிக்கைகளுக்காக அதிக நேரத்தை செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள பிரம்மாண்டமான பசிலிக்காக்கள் மற்றும் தேவாலயங்கள் இன்று வெற்று இடங்களாக மாறியுள்ளன எனவும், அதற்கு பதிலாக விளையாட்டு மைதானங்களும் பொழுதுபோக்கு மையங்களும் மக்களால் நிரம்பியுள்ளன எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
இறைவன் மீதான நம்பிக்கை சிதைவடைந்துள்ளதால், மனிதன் தற்காலிக திருப்தியையும் பௌதீக வளங்களையும் சேகரிப்பதன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறான் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதநேயத்தின் உன்னத குணங்களை மறந்து, உடல் ரீதியான தேவைகளை மட்டுமே சிந்திக்கும் ஒரு சமூகம் உருவாகி வருவதாகவும், இவ்வாறானதொரு பின்னணியில் ஆன்மீக வாழ்க்கைக்கு மிகக் குறைந்த இடமே கிடைத்துள்ளதாகவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.