மொட்டுக் கட்சியின் பிரதேச அரசியல்வாதியை பிடித்து மின் கம்பத்தில் கட்டிய மக்கள்
பாணந்துறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்த பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த பிரதேச அரசியல்வாதி, மது போதையில் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் மோசமாக நடந்துக்கொண்டதால், மக்கள் பிடித்து அவரை மின் கம்பத்தில் கட்டியுள்ளனர்.
வீதியோரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் பிரதேச சபை உறுப்பினரை கட்டியுள்ள பிரதேச மக்கள், பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், பிரதேச சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர். கைது செய்த பின்னர், அவர் மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மது அருந்தி இருப்பது உறுதியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட பாணந்துறை பிரதேச சபை உறுப்பினரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.