அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மக்கள்! சஜித் பிரேமதாச கவலை
யதார்த்தத்தைப் பேசினால் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் பொதுமக்கள் அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளில் ஏமாந்து போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
பொய் வாக்குறுதிகள்..
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த காலங்களில் மக்கள் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசியல்வாதிகளுக்கே ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.
2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது புத்திஜீவிகளின் வழிகாட்டலில் ஆட்சி செய்யப்போவதாகவும் இன்னும் பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளிவீசிய அரசியல்வாதிக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த அதிகாரத்தையும் வழங்கினார்கள். ஆனால் அவர்கள் கடைசியில் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைய வைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை படுகுழியில் தள்ளிவீழ்த்தி விட்டு தப்பியோடினார்கள்.
அவர்களின் அடுத்த தலைமுறை பவுடர் பேபிகளாக , அப்பாவிகளாக தற்போதைக்கு சமூகத்தை ஏமாற்ற முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களையும் ஏற்றுக் கொள்ள ஒரு சில மக்கள் இன்னும் தயாராக இருக்கின்றார்கள். அதேபோன்று இந்த அரசாங்கம் கடந்த தேர்தல்களுக்கு முன்னர் பல்லாயிரம் வாக்குறுதிகளை அள்ளிவீசியது.
கப்பலில் இருந்து இறக்கும் அதே விலைக்கே எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்தார்கள். ஆனால் தற்போது எரிபொருள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை வாட்டும் வரிகளை குறைக்கப் போவதாக வாக்குறுதியளித்தார்கள். ஆனால் புதுப்புது வரிகளை அறிமுகப்படுத்தி மக்களை இன்னும் வாட்டி வதைக்கின்றார்கள்.
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு மடங்கு குறைப்பதாக சத்தியம் செய்தார்கள் . ஆனால் தற்போது மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியே இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டது.
ஆனால் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தற்போது மறந்துவிட்டது. ஆனால் நாங்கள் உண்மையை, யதார்த்தத்தை மட்டுமே பேசுகின்றோம். அதன் காரணமாகவே இரண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவினோம்.
இருந்தும் கவலைப்படவில்லை. உண்மையை புரிந்து கொள்ளும் மக்கள் என்றைக்காவது எங்களுக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.