மாற்றியமைக்க நாம் தயார்! விசேட உரையில் கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு (Video)
ஜனாதிபதியாக தாம் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறும் ஒருவராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு பல மாதங்களாக மூடப்பட்டிருந்தததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வருவமானம், சுற்றுலாத் துறை, ஆடை தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாரிய செலவீனங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
எனினும், இன்று சாதாரண வாழ்கையை மீளப்பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்ததை அடுத்து, 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கடந்த டிசம்பர் மாதம் 12ம் திகதி முடிவுக்கு கொண்டு வந்தார்.
அரசியலமைப்பின் 70 (1) சரத்துக்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முடிவுக்கு கொண்டு வந்தார்.
நாடாளுமன்றத்தின் 2வது கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 18ம் திகதி வரை ஜனாதிபதியினால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (2022.01.18) காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
தனது அக்கிராசன உரையில் தொடர்ந்தும் கருத்து ஜனாதிபதி,
“கோவிட் பாதிப்புக்கு மத்தியிலும் நீண்ட கால அபிவிருத்திகள் கைவிடப்படவில்லை. தமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து வருட காலப்பகுதியில் 3 வருட காலத்தில் பாரிய விடயங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்தது.
தமது அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப்படவில்லை. எதிர்காலத்திலும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது. சமாதானமான நாடு ஒன்றை கட்டியெழுப்பவேண்டியது அவசியம். அதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
காணாமல் போனோர் விடயம் ஒரு பிரிவினருக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல. எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேசத்தின் பரிந்துரைக்கு பதில் அளிக்க நாடு தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
படையினரிடம் கைவசம் உள்ள பொதுமக்களின் காணிகளில் 90 வீதம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும். இயற்கை விவசாய முறையில் ஏற்பட்ட தடங்கல்களை நிவர்த்தி செய்து குறித்த திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்கங்களினால் உரிய திட்டங்கள் செயற்படுத்தப்படாமையால், பொருளாதாரத்தில் வெளிநாட்டு செலவாணி தொடர்பில் இன்று பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாகன இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் நிலைப்பாடுகளை கைவிட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் நிலைப்பாடுகளை கைவிட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டை முன்னேற்றச்செல்லும் முயற்சிக்கு தாம் தலைமை தாங்க தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்