21 முதல் 24 வரை நாடாளுமன்ற அமர்வுகள்! எதிர்பார்க்கப்படும் ரணில்- சுமந்திரன் சாணக்கியனின் வாதவிவாதங்கள்!
நாடாளுமன்ற அமர்வுகள்
இலங்கை நாடாளுமன்றம் இந்த மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இதன்போது 24ம் திகதியைத் தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
21ஆம் திகதியன்று முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்த யோசனை மற்றும் குடியியல் நடைமுறைச் சட்டம் திருத்த யோசனை ஆகியவை விவாதம் இன்றி நிறைவேற்றப்பட உள்ளன.
இதேவேளை, நாட்டில் நிலவும் சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் தொடர்பான விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோப் என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் முதலாவது அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 23 ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
பின்னர் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. தொழில் பிணக்குகள் தொடர்பான யோசனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துகோரளையின் இரண்டாம் நாள் வாக்கெடுப்பு
அண்மையில் இடம்பெற்ற மோதல்களின் போது படுகொலை செய்யப்பட்ட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அனுதாப யோசனையின் இரண்டாம் நாள் அமர்வுக்காக எதிர்வரும் 24ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரத்தை ஒதுக்குவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீதும், சுமந்திரன் மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் எதிர்வரும் அமர்வுகளின்போது வாதவிவாதங்களுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.